அந்நிய மரங்களை அகற்ற தனித்தனிக் குழுக்கள் அமைக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


அந்நிய மரங்களை அகற்ற தனித்தனிக் குழுக்கள் அமைக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x

அந்நிய மரங்களை அகற்ற தனித்தனிக் குழுக்கள் அமைக்க வேண்டும் என வனத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி குழுக்களை அமைக்க வனத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அகற்றப்பட்ட இந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு வழங்குவது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "அகற்றப்பட்ட அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளது" எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "கடந்த முறை இதுதொடர்பான கோப்பு நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருப்பது, நீதிமன்றத்தின் கண்ணியத்தை குலைப்பது ஆகாதா?" என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, அந்த அறிக்கையை திரும்பப் பெறுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஐகோர்ட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மஞ்சள் பை மிஷின் வைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்றுவது, கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கு என தனித்தனி குழுக்களை அமைக்க வேண்டும் என முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story