சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு


சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 10 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 6:46 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் நீதிமன்றத்தில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் (அறிவுசார் சொத்துரிமை வழக்குகள், நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் பகுதி நீதிசார் அமைப்பு வழக்குகள்) நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரபாகர், இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி அன்வர் சதாத், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

இதில் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, செயலாளர் சிவசிதம்பரம் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி

பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பண்ருட்டி சட்டப்பணிகள் குழுசார்பில் சார்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.சாவித்திரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகளை விசாரணை செய்து முடித்து வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

150 வழக்குகளுக்கு தீர்வு

இதேபோல் மாவட்டத்தில் நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய நீதிமன்றங்களிலும் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 200 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 91 லட்சத்து 79 ஆயிரத்து 650 வசூலிக்கப்பட்டது.


Next Story