தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,717 வழக்குகளுக்கு தீர்வு

கரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,717 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் நேற்று 3- வது தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை நீதிமன்றம், கிருஷ்ணராயபுரம் மற்றும் அரவக்குறிச்சி தாலுக்கா நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு, 5 அமர்வுகளில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
1,717 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விவகாரத்து தவிர இதர மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1,717 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவ்வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.9 கோடியே 45 லட்சத்து 89 ஆயிரத்து 811 ஆகும். இதில் நீதிபதிகள், பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் வழக்காடிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கோகுல் முருகன் செய்திருந்தார்.
குளித்தலை
குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதற்கு குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி தலைமை தாங்கினார். இதில் 272 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 67 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் நீதிபதிகள் பாலமுருகன், பிரகதீஸ்வரன், குளித்தலை வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, உள்பட பலர் கலந்து கொண்டனர்.






