தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,790 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,790 வழக்குகளுக்கு தீர்வு
x

கடலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,790 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தலைமை தாங்கினார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுபா அன்புமணி, எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் லிங்கம், கூடுதல் சார்பு நீதிபதி-I மோகன் ராஜ், கூடுதல் சார்பு நீதிபதி-II அன்வர் சதாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

இதில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கமலநாதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-I வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-III ரகோத்தமன், மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், செயலாளர் செல்வகுமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமநாதன், செயலாளர் ராம்சிங் மற்றும் வக்கீல்கள், போலீஸ் நிலைய அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடந்தது. இதற்கு 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பிரபாசந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான ஜெகதீஸ்வரி முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ், மாஜிஸ்திரேட்டு அன்னலட்சுமி மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் மோட்டார் வாகன விபத்து காப்பீடு வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 162 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 72 ஆயிரத்து 443-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்தராமன் செய்திருந்தார்.

1,790 வழக்குகளுக்கு தீர்வு

இதேபோல் கடலூர் மாவட்ட தாலுகா நீதிமன்றங்களான பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 7,071 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,790 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.33 கோடியே 7 லட்சத்து 84 ஆயிரத்து 372 வசூலிக்கப்பட்டது.


Next Story