சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்


சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்
x

சீர்காழி பஸ் நிலையம் அருகே சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் நகராட்சி ஆணையரிடம், அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் கடந்த சில வாரங்களாக சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பல்வேறு தெருக்களில் குப்பைகள் முறையாக அல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் சீர்காழி அ.தி.மு.க. நகர செயலாளர் வினோத் தலைமையில், முன்னாள் நகர செயலாளர்கள் பக்கிரிசாமி, மணி, நகர துணை செயலாளர் பரணிதரன், வக்கீல் நெடுஞ்செழியன் உள்பட பலர் சீர்காழி நகராட்சி ஆணையர் ராஜகோபாலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை தினந்தோறும் அள்ள வேண்டும். பழைய பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலை தரமாக கட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நகர செயலாளர் வினோத் கூறுகையில் சீர்காழி நகராட்சியில் முறையாக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் சீர்காழி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.



Next Story