விழுப்புரம் அருகே தனித்தனி சம்பவம்: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது


விழுப்புரம் அருகே தனித்தனி சம்பவம்:    சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2022 6:45 PM GMT (Updated: 17 Nov 2022 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே தனித்தனி சம்பவத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவியும், கப்பூரை சேர்ந்த காளி மகன் மாணிக்கம் (21) என்பவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். தற்போது அந்த மாணவி, மாணிக்கத்துடனான தொடர்பை தவிர்த்து விட்டார். இதனால் அவர், அந்த மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறும், இல்லையெனில் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

இதையறிந்த மாணவியின் பெற்றோர், மாணிக்கம் வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரும், அவரது அண்ணன் அருண்குமாரும் (25) சேர்ந்து மாணவியின் பெற்றோரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மாணிக்கம், அருண்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் விழுப்புரம் அருகே பள்ளிபுதுப்பட்டை சேர்ந்த 4 வயதுடைய சிறுமி, தனது வீட்டின் பின்புறம் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பிரதாப் (21) என்பவர் அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரதாப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story