மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கரூர்

மாணவிக்கு பாலியல் தொல்லை

கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை அக்கல்லூரியின் முதல்வரும், குளித்தலை காவிரி நகரை சேர்ந்த வக்கீலுமான செந்தில்குமார் பலமுறை பாலியல் தொந்தரவு செய்து, திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு கல்லூரியின் விடுதி காப்பாளராக பணிபுரியும் அமுதவள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சமையல் மற்றும் பராமரிப்பு பணி செய்து வந்த மற்றொரு மாணவி ஆகிய 2 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமார், அமுதவள்ளி உள்பட 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரான அந்த தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டு சமையலராக இருந்த அக்கல்லூரி மாணவியை அவரது சொந்த ஊரிலேயே குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நர்சிங் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவள்ளி ஆகிய 2 பேரையும் கடந்த மாதம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வேண்டுகோளின் பேரில், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில்குமார் மற்றும் அமுதவள்ளி ஆகிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான கடிதத்தை சிறையில் இருந்த அவர்களிடம் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழங்கினர்.


Next Story