பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: கள்ளக்குறிச்சி போலீஸ்காரர் ஆஜராகி சாட்சியம்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:  கள்ளக்குறிச்சி போலீஸ்காரர் ஆஜராகி சாட்சியம்
x

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி போலீஸ்காரர் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

கள்ளக்குறிச்சி


பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்தார்.


இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சியான அப்போதைய பெரம்பலூர் போலீஸ்காரரும் தற்போது கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவருமான டேவிட்ஆனந்தராஜ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியங்களை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார்.


தொடர்ந்து, போலீஸ்காரர் டேவிட் ஆனந்தராஜிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீலும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீலும் குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளான அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி பார்த்திபன் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.


Next Story