ஆவடி போலீஸ் கமிஷனராக சங்கர் பொறுப்பேற்பு


ஆவடி போலீஸ் கமிஷனராக சங்கர் பொறுப்பேற்பு
x

ஆவடி போலீஸ் கமிஷனராக சங்கர் பதவி ஏற்றுக்கொண்டு உடனடியாக பணியை தொடங்கினார்.

சென்னை

ஆவடி போலீஸ் கமிஷனராக கே.சங்கர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டு உடனடியாக பணியை தொடங்கினார். அவருக்கு அலுவலகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் 3-வது போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுள்ள சங்கர், செங்கை கிழக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தவர். அதனால் ஆவடி சுற்றுவட்டார பகுதிகள் அவருக்கு நன்கு தெரியும். பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தவர். செங்கை கிழக்கு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்தவர்.

சென்னையில் இணை கமிஷனர், கூடுதல் கமிஷனராக, தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை-மகன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி, ஐ.ஜி.யாக சங்கர் பணியாற்றியபோது இவர் தலைமையில் விசாரனை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தார். இவர் நேர்மையான, தலைசிறந்த, புலனாய்வு போலீஸ் அதிகாரி என பெயர் பெற்றவர்.

பின்னர் நிருபர்களிடம் கமிஷனர் சங்கர் கூறும்போது, "ஆவடி கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கடைபிடிக்கப்படும். ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பணி தொடரும். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


Next Story