கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகள்


கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகள்
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 12 April 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியே செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றன. அதுபோல் என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்களில் இங்குள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சாலை கருதப்படுகிறது. ஆனால் இந்த சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதோடு இந்த வழியில் உள்ள சாலைகளும் மிக மோசமான நிலையில் காணப்பட்டன.

நான்கு வழிச்சாலையாக...

இதனை கருத்தில் கொண்டு விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு 2010-ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைகின்றன. இதுதவிர 5 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. இந்த சாலை பணிகள் 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடந்து வருகிறது. குறிப்பாக பாலம் அமைக்கும் பணிகள் பல இடங்களில் முடிக்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன.

கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணி

குறிப்பாக விழுப்புரம்- பண்ருட்டி சாலையில் கோலியனூர் கூட்டுசாலை அருகில் இருக்கும் ரெயில்வே கேட்டை வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. ரெயில்வே கேட்டின் இடதுபுற பகுதியில் மட்டும் பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் (கான்கிரீட் தூண்கள்) எழுப்பப்பட்ட நிலையில் வலதுபுற பகுதியில் கான்கிரீட் தூண்கள் எழுப்பப்படாமல் அப்பணிகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்.

இதன் காரணமாக அங்குள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் ரெயில்கள் செல்லும்போது கேட் மூடப்படும் சமயத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் ஆங்காங்கே பரவிக்கிடக்கிறது. இதனால் அங்குள்ள சாலைகள் படுமோசமாக காட்சியளிப்பதால் சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே 3 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே இருக்கும் மேம்பால பணிகளை மீண்டும் தொடங்கி அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துகள் அதிகரிப்பு

இதுபற்றி விழுப்புரத்தை சேர்ந்த ராமு கூறுகையில், ராமையன்பாளையம், சுந்தரிப்பாளையம், வாணியம்பாளையம், புருஷானூர், ப.வில்லியனூர், வி.அகரம், பஞ்சமாதேவி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கோலியனூர் கூட்டுசாலை அருகில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து விழுப்புரம் வருகிறார்கள். அதுபோல் பள்ளி- கல்லூரி மாணவர்களும் பெரும்பாலும் இவ்வழியாக வந்து செல்கின்றனர். இப்படியிருக்க ரெயில் செல்லும்போது இங்குள்ள கேட் மூடப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேம்பால பணிக்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கிராவல் மண் அங்குள்ள சாலை முழுவதும் பரவிக்கிடப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனாலேயே இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு

வாணியம்பாளையத்தை சேர்ந்த பாலாஜி கூறும்போது, விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி, கடலூர் மார்க்கம் செல்பவர்களும், கும்பகோணம், தஞ்சாவூர் செல்கிறவர்களும் கோலியனூர் கூட்டுசாலை அருகில் உள்ள ரெயில்வே கேட்டின் வழியாகத்தான் சென்று வருகின்றனர். இவ்வாறு இருக்க தினமும் காலை, மாலை வேளையில் பள்ளி நேரங்களில் ரெயில் செல்வதற்காக இங்குள்ள கேட் மூடப்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி- கல்லூரி மாணவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் சில சமயங்களில் அவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளி- கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அங்கு கிடப்பில் போடப்பட்டிருக்கும் மேம்பால பணியை துரிதப்படுத்தி கட்டி முடித்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும்,மேலும் குண்டும்- குழியுமாக இருக்கும் சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story