திருக்கோவிலூர் அருகே கரும்பு வயலில் கிடந்த சிவலிங்கம், நந்தி சிலை போலீசார் விசாரணை


திருக்கோவிலூர் அருகே கரும்பு வயலில் கிடந்த சிவலிங்கம், நந்தி சிலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் அருகே கரும்பு வயலில் கிடந்த சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் பார்த்தசாரதி(வயது 44). இவருக்கு சொந்தமான கடம்பூரில் இருந்து கரையான் பாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்த கரும்புகளை அறுவடை செய்யும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது கரும்பு வயலின் நடுவில் ஒரு சாக்குப்பை இருந்தது. அந்த பையை அங்கிருந்த தொழிலாளர்கள் பிரித்து பார்த்தபோது, அதில் உலோகத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் இருந்தது தெரியவந்தது.

திருடப்பட்டதா?

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோர் அங்கு வந்து சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை கைப்பற்றினர். ஆனால் அந்த சிலைகள் யாருடையது? எப்படி அங்கு வந்தது? என்று உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து அந்த சிலையை சங்கராபுரம் தாசில்தார் சரவணனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

கரும்பு தோட்டத்தில் கிடந்த சிலைகள் கோவிலில் திருடப்பட்டதா? அல்லது வேறு யாருக்கும் சொந்தமானதா? என்பது குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர். கரும்பு வயலில் சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story