பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 Oct 2023 7:00 PM GMT (Updated: 12 Oct 2023 7:00 PM GMT)
தர்மபுரி

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ வழிபாடு

தர்மபுரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரியில் உள்ள கல்யாண காமாட்சி அம்மன் உடனமர் மல்லிகார்ஜூன சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முதலில் நந்திக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், உபகார பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனமர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி, மகா லிங்கேஸ்வரருக்கு விபூதி, சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனமர் ஆனந்த நடராஜர் கோவிலில் நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மருதவாணேஸ்வரர் கோவில்

இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

கடத்தூர் அருகே நல்லகுட்ல அள்ளி கிராமத்தில் உள்ள சிவசக்திஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி மஞ்சள், இளநீர், நெய், பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அமிர்தேஸ்வரர் கோவில்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தத்தில் உள்ள அமிர்தேஸ்வரர், ஸ்ரீ அமிர்தாம்பிகை கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story