சிங்கப்பெருமாள் கோவிலில் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


சிங்கப்பெருமாள் கோவிலில் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x

சிங்கப்பெருமாள் கோவிலில் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

தண்ணீர் வெளியேற வழிவகை

செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு நேற்றும் விடுமுறை விட்டிருந்தது. பெரும்பாலான கிராம சாலைகளில் ஆங்காங்கே மழைநீர தேங்கி நின்றது. செங்கல்பட்டு நகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் செய்யப்பட்டு சாலையில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்து வருகின்றனர்.

இது போல சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஊராட்சியாகும். அங்கு நேற்று முன் தினம் பெய்த மழையில் வழக்கம் போல விஞ்சியம்பாக்கம் பகுதி தேசிய நெடுஞ்சாலையை மழைநீர் சூழ்ந்து கொண்டது.

இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு மணிநேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலையோர கால்வாய் மீது உள்ள மூடிகளில் உள்ள அடைப்புகளை நீக்கி தண்ணீர் வெளியேற வழிவகை செய்தனர்.

மழைநீர் வடிகால்

இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி, பாரேரி, விஞ்சியம் பாக்கம் என 3 கிராமங்கள் உள்ளன. இதில் திருத்தேரி கிராமம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டியும், பாரேரி கிராமம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும் விஞ்சியம்பாக்கம் கிராமம் இந்த இரு சாலைகளின் இரு புறத்திலும் உள்ளன.

இந்த கிராமங்களில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் தென்மாவட்டங்களில் இருந்து. இந்த கிராமங்களில் வாடகை வீட்டில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டும். இதனால் எப்போதும் பரபரபாக காணப்படும் இந்த பகுதியில் 8 வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று இந்த சாலைகளின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன? பிரச்சனை என்றால் ஏற்கனவே இருந்த சர்வீஸ் ரோட்டை எடுத்துவிட்டு தான் சாலை விரிவாக்கம் செய்தனர். தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் சர்வீஸ் ரோடு இல்லாமல் சாலையின் ஒரம் நடந்து செல்கின்றனர். கால்வாய் மீது நடந்துபோகலாம் என்றால் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் கால்வாயை ஆக்கிரமித்து அதன் மீது வியபாரம் செய்கின்றனர். இதுமட்டும் அல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே மேசை, நாற்காலி போட்டு போண்டா, பஜ்ஜி, டீ சாப்பிடுகின்றனர். இதற்கு ஊராட்சி மன்றம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்கள் கோரிக்கை

சாலையோரம் நடந்து செல்வோர் மீது வாகனங்கள் வரும் வேகத்தில் மழைநீர் சீறிபாய்ந்து உடல் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். இல்லையென்றால் கால்வாய் மீதுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். என்பதே இந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. இதே நிலைமை தான் கிங்கப்பெருமாள் பஜார் வீதியிலும் இதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story