கடைகள், ஓட்டல்கள் இரவு நேரங்களில் செயல்படுவதை தடுக்கக்கூடாது - டி.ஜி.பி. அறிவுறுத்தல்


கடைகள், ஓட்டல்கள் இரவு நேரங்களில் செயல்படுவதை தடுக்கக்கூடாது - டி.ஜி.பி. அறிவுறுத்தல்
x

கடைகள், ஓட்டல்கள் இரவு நேரங்களில் செயல்படுவதை தடுக்கக்கூடாது என தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு ஏற்கனவே வழங்கி உள்ளது.

அரசு ஆணை மற்றும் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றி செயல்பட போலீஸ் கமிஷ்னர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில இடங்களில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் ஓட்டல்களை மூடுமாறு வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

எனவே, சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் போன்றவற்றின் வணிக செயல்பாடுகள் குறிப்பாக இரவு நேரங்களில் குறுக்கிடக்கூடாது. அதேவேளையில் சட்டவிரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story