மத்திய போலீஸ் அதிகாரி என போலி அடையாள அட்டையை காட்டி வீடு வாடகைக்கு கேட்டு ரூ.90 ஆயிரம் மோசடி; ராஜஸ்தானில் ஈரோடு போலீசார் விசாரணை


மத்திய போலீஸ் அதிகாரி என போலி அடையாள அட்டையை காட்டி  வீடு வாடகைக்கு கேட்டு ரூ.90 ஆயிரம் மோசடி;  ராஜஸ்தானில் ஈரோடு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Dec 2022 9:52 PM GMT (Updated: 19 Dec 2022 10:11 AM GMT)

மத்திய போலீஸ் அதிகாரி என்று போலி அடையாள அட்டையை காட்டி வீடு வாடகைக்கு கேட்டு ரூ.90 ஆயிரம் மோசடி செய்த நபரை பிடிக்க ஈரோடு சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் சென்றனர். ஆனால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திரும்பி வந்தனர்.

ஈரோடு

மத்திய போலீஸ் அதிகாரி என்று போலி அடையாள அட்டையை காட்டி வீடு வாடகைக்கு கேட்டு ரூ.90 ஆயிரம் மோசடி செய்த நபரை பிடிக்க ஈரோடு சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் சென்றனர். ஆனால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திரும்பி வந்தனர்.

வீடு வாடகைக்கு

ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கு கோவையில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீடு வாடகைக்கு விடப்படும் என்று இணையதளத்தில் அவர் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் வீட்டிற்கு முன்பணமாக ரூ.40 ஆயிரமும், மாத வாடகையாக ரூ.10 ஆயிரமும் தரவேண்டும் என்று குறிப்பிட்டு, தனது தொடர்பு எண்ணையும் அதில் பதிவிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை பார்த்த ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், 'தனது கணவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், அவர் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டு உள்ளார். பின்னர் மறுநாள் மீண்டும் அந்த பெண் தொடர்பு கொண்டு வீடு கேட்டபோது, தனது கணவர் உங்களிடம் பேசவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் கணவர் என பேசிய நபர் தனது பெயர் அக்கீத் விஜய் என்று அறிமுகப்படுத்தி கொண்டு தனது அடையாள அட்டையை அனுப்பி வைத்தார். மேலும் வீடு வாடகை மற்றும் முன் பணம் கொடுக்க எங்களுக்கு சம்மதம் என்றும் தெரிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து அவர் எங்களது வங்கி கணக்கு மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் நேரடியாக நாங்கள் முதலில் உங்களுக்கு பணம் செலுத்த முடியாது. எனவே நீங்கள் முதலில் நான் அனுப்பும் க்யூ.ஆர். கோடுக்கு ஸ்கேன் செய்து ரூ.1 செலுத்துங்கள் என்று கூறிஉள்ளார். அதன்படி வீட்டின் உரிமையாளரும் ரூ.1 அனுப்பி உள்ளார். உடனே அவருக்கு ரூ.2 திரும்ப வந்துவிட்டது.

புகார்

இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் ரூ.45 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அவருக்கு மீண்டும் பணம் திரும்பி வரவில்லை. அதைத்தொடர்ந்து பணம் அனுப்ப சொன்னவரிடம் கேட்டபோது நீங்கள் தவறுதலாக ஏதாவது செய்து இருப்பீர்கள் எனவே நீங்கள் முன்பு அனுப்பிய ரூ.1 போக மீதமுள்ள ரூ.44 ஆயிரத்து 999 செலுத்துங்கள் மொத்தமாக உங்களுக்கு பணம் திரும்ப வந்துவிடும் என்று கூறிஉள்ளார். இதை உண்மை என நம்பி மீண்டும் ரூ.44 ஆயிரத்து 999 அனுப்பினார். ஆனால் ரூ.90 ஆயிரமும் மீண்டும் வரவில்லை.

அதைத்தொடர்ந்து அந்த நபர் தனது செல்போனையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியபோது, அக்கீத் விஜய் என்பவர் அனுப்பிய போலீஸ் அதிகாரி என்ற அடையாள அட்டை போலியானது என்று தெரியவந்தது.

ராஜஸ்தான் விரைந்த போலீசார்

இணையதளத்தில் வேறு ஒரு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து அதில் படத்தை மாற்றி மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் எந்த வங்கி கணக்கிற்கு இந்த பணம் அனுப்பப்பட்டது என்று விசாரணை நடத்தினர். அப்போது அது கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது இந்த வங்கி கணக்கு அரியானா மாநிலத்தில் இருந்து ஆன்லைனில் தொடங்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர் மோசடி நபர் தொடர்பு கொண்ட ஆடியோ மற்றும் செல்போன் எண்ணை கண்காணித்தபோது அது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ரஷியா என்ற கிராமத்தில் சிக்னல் காட்டியது. இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர். அவர்கள் பரத்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினர்.

தலைமறைவு

பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடனும், செல்போன் சிக்னல் உதவியுடன் மோசடி நபரின் வீட்டை ஈரோடு போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அதற்குள் மோசடி நபர் வீட்டில் இருந்து தலைமறைவாகி விட்டார். வீட்டில் அவருடைய பெற்றோர் மற்றும் மனைவி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர் எங்கு இருக்கிறார் என்று தங்களுக்கு தெரியாது என்றும், அவரது செல்போன் எண்ணும் தெரியாது என்றும் கூறி உள்ளனர். இதையடுத்து ஈரோடு போலீசார் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து விட்டனர். பின்னர் அந்தபகுதியை சேர்ந்த சிலர் ராஜஸ்தான் போலீசார் முன்னிலையில் தமிழக போலீசாரிடம் நீங்கள் தேடி வந்த நபர் மீது எந்த குற்றமும் இல்லை.

வேண்டும் என்றால் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம் என்று கூறி எப்படி பணத்தை மோசடி செய்தாரோ அதேபோல் வீட்டின் உரிமையாளருக்கு அவர்கள் பணத்தை திருப்பி செலுத்தினர். ஆனாலும் போலீசார் மோசடி நபர் குறித்த விவரங்களை ராஜஸ்தான் சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து அவர் பற்றிய விவரங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் அவரை கண்டுபிடித்து கைது செய்யவும் ஈரோடு போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story