விருகம்பாக்கத்தில் சித்த வைத்தியர் அடித்துக்கொலை - நண்பர் கைது


விருகம்பாக்கத்தில் சித்த வைத்தியர் அடித்துக்கொலை - நண்பர் கைது
x

விருகம்பாக்கத்தில் சித்த வைத்தியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை விருகம்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 50). சித்த வைத்தியர். இதேபோல் எம்.ஜி.ஆர். நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் களியமூர்த்தி (54). இவர், வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் 40 ஆண்டு கால நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் கார்த்திகேயன், ரூ.50 ஆயிரத்தை களியமூர்த்தியிடம் கொடுத்து வைத்திருந்தார். கடந்த 9-ந் தேதி களியமூர்த்தி வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற கார்த்திகேயன், தான் கொடுத்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை தரும்படி கேட்டார்.

இதில் நண்பர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் தலையில் படுகாயமடைந்த சித்த வைத்தியர் கார்த்திகேயன், போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து களியமூர்த்தியை கைது செய்தனர்.


Next Story