திருவாலங்காடு-மோசூர் இடையே சிக்னல் கோளாறு: அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி


திருவாலங்காடு-மோசூர் இடையே சிக்னல் கோளாறு: அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
x

திருவாலங்காடு - மோசூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு-மோசூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் நேற்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் அரக்கோணம் வழித்தடத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் புறநகர் ரெயில்கள் பாதியிலே நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து, ரெயில்வே உயரதிகாரிகள் மற்றும் சிக்னல் பழுது பார்க்கும் ஊழியர்கள் சிக்னலில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். பின்னர் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் ஒன்றன், பின் ஒன்றாக இயக்கப்பட்டது. 40 நிமிடத்திற்கும் மேலாக ஏற்பட்ட இந்த சிக்னல் கோளாறால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் நடுவழியில் கடும் அவதிக்கு உள்ளாகினர்.


Next Story