ஒற்றைத் தலைமை விவகாரம்: தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் இல்லை - வைத்திலிங்கம்


ஒற்றைத் தலைமை விவகாரம்: தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் இல்லை - வைத்திலிங்கம்
x

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் இல்லை என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த சூழலில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், " தேர்தல் ஆணையத்திடம் செல்ல உள்ளதாக பரவிய தகவல் தவறானது. அதிமுக பொதுக் குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு இப்போது செல்ல மாட்டோம். அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை பொறுத்தே தேர்தல் ஆணையத்திற்கு செல்வது குறித்து முடிவு செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story