சிறுவாணி அணை நீர்மட்டம் 21 அடியாக உயர்வு

சிறுவாணி அணை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 21 அடியை தாண்டி உள்ளது.
கோவை மாநகர பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் அடர்ந்த வனப் பகுதியில் இருக்கிறது.
50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 45 உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு முழுவதும் அணைப்பகுதியில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 75 மி.மீட்டர் மழை பெய்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 21 அடியை தாண்டி உள்ளது.எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
அணையில் நீரேற்று நிலையத்தில் அடிப்பகுதியில் இருக்கும் வால்வும், 2-வது வால்வும் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி இருக்கிறது.
இது குறித்து குடிநீர் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப் படி 75 மி.மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அடி வாரத்தில் 46 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதனால் அணையில் இருந்து குடிநீருக்காக 7 கோடியே 60 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்தால் அணை விரைவில் நிரம்பிவிடும் என்றனர்.






