பெண்ணாடம் அருகே ஏரியில் மூழ்கி அக்காள்- தங்கை பலி


பெண்ணாடம் அருகே ஏரியில் மூழ்கி அக்காள்- தங்கை பலி
x

பெண்ணாடம் அருகே ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை உயிரிழந்தனர்.

கடலூர்

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பெ.பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 37). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கன்னியாகுமரி. இவர்களுக்கு முத்துலட்சுமி (15), சிவசக்தி (13), சிவரஞ்சனி (10), பரமேஸ்வரி (8), காவியா (5) ஆகிய 5 பெண் குழந்தைகளும், சிவபெருமான்(4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரியின் பெற்றோர் ஊரான திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமாரி தனது மகள்கள் முத்துலட்சுமி, சிவசக்தி ஆகியோருடன் வந்துள்ளார். திருவிழாவையொட்டி மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்றது. இதில் குழந்தைகள் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

ஏரியில் பிணம்

இந்த நிலையில் நீண்டநேரமாகியும், முத்துலட்சுமி, சிவசக்தி ஆகியோர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கன்னியாகுமரி மற்றும் உறவினர்கள் முத்துலட்சுமியையும், சிவசக்தியையும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திருமலை அகரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் முத்துலட்சுமியும், சிவசக்தியும் பிணமாக மிதந்தனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

சோகம்

இதுபற்றி தகவல் அறிந்ததும், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் ஏரியில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முத்துலட்சுமி, படிக்காமல் வீட்டில் இருந்து வந்ததும், சிவசக்தி பெ.பூவனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏ்றபடுத்தி உள்ளது.


Next Story