கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
x

கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதாக தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஹேமலதா கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர்

திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 3 மாத கால திறன் மேம்பாட்டு பயிற்சியானது தமிழ்நாடு கட்டுமான கழகமானது தனியார் கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து இப்பயிற்சியை நடத்த உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.

வயது 18-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

வயது வரம்பு...

ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சியானது, தமிழ்நாடு கட்டுமான கழகம், தனியார் கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் சேர்ந்து இப்பயிற்சியை நடத்த உள்ளன. காஞ்சீபுரம் மாவட்டம், தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.

கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சியாளர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய ரூ.800 வழங்கப்படும்.

சான்றிதழ்

தமிழ்நாடு கட்டுமான கழகம், தனியார் கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். எனவே, பயிற்சியில் சேர தகுதி உள்ள தொழிலாளர்கள் தங்களுடைய நலவாரிய அட்டை, கல்வி தகுதி, ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் கரூர், வெண்ணைமலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story