தண்டவாளத்தில் மண் சாிவு


தண்டவாளத்தில் மண் சாிவு
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

குழித்துறை அருகே தண்டவாளத்தில் மண் சாிவு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குமரியில் பெய்த கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் குழித்துறை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை 4.30 மணி அளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று பாா்த்தனர். அப்போது தண்டவாளத்தில் சிறிதளவு மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி வேகமாக நடந்தது.

சுமார் 1 மணி நேர பணிகளுக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த மண் முழுமையாக அகற்றப்பட்டது.

இதற்கிடையே தண்டவாளத்தில் மண் சாிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த வகையில் மதுரையில் இருந்து புனலூர் செல்லும் ரெயில் இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்துக்கு காலை 5 மணிக்கு வர வேண்டும். ஆனால் நேற்று 1.30 மணி நேரம் தாமதமாக 6.30 மணிக்கு வந்தது.

இதே போல நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு காலை 4.15 மணிக்கு புறப்பட்டு 5 மணிக்கு குழித்துறை செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடங்கள் தாமதமாக 5.30 மணிக்கு குழித்துறை வந்தது. மற்றபடி அனைத்து ரெயில்களும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. ஆனால் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை கடந்து செல்லும் போது மெதுவாக செல்லும்படி என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


Next Story