குறைந்த நீரில் சிறுதானியங்கள் பயிரிட்டு லாபம் பெறலாம்


குறைந்த நீரில் சிறுதானியங்கள் பயிரிட்டு லாபம் பெறலாம்
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

குறைந்த நீரில் சிறுதானியங்கள் பயிரிட்டு லாபம் பெறலாம் என அதிகாரி தெரிவித்தார்.

ராமநாதபுரம்

திருப்புல்லாணி, உச்சிப்புளி பகுதிகளில் நெல் விதைப்பு பணி தொடங்கி உள்ளது. நெல்பயிர் வளர 1100 மி.மீ. தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்திட சுமார் 300 முதல் 400 மி.மீ. நீரே போதுமானது. ஆதலால் சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி விவசாயிகள் நடப்பு ஆண்டில் தங்களது நெல்பயிர் பரப்பில் ஒரு பகுதியினை குறைத்து அதில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய வேளாண்மை துறையினர் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். சிறுதானிய எம்.டி.யு-1 ரக குதிரைவாலி விதைகள் திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை கிராம திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுதானியம் விதைக்கும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உழவு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் சிறுதானியங்களை பயிர் செய்து குறைவான தண்ணீரில் அதிக பயனடையலாம். இத்தகவலை திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் தெரிவித்தார்.


Next Story