விருத்தாசலம், பரங்கிப்பேட்டையில்புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களிடம் விழிப்புணர்வு


விருத்தாசலம், பரங்கிப்பேட்டையில்புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களிடம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

விருத்தாசலம், பரங்கிப்பேட்டையில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர்


விருத்தாசலம்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக இந்த பண்டிகையின் போது வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது வழக்கம்.

அந்த வகையில், வருகிற 14-ந்தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், கொண்டாட வலியுறுத்தி விருத்தாசலத்தில் நகராட்சி சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு

நகராட்சி ஆணையாளர் சேகர், துப்புரவு அலுவலர் பூபதி, துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்தமிழ் செல்வன், ஆறுமுகம், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரா மற்றும் பரப்புரையாளர்கள் விருத்தாசலம் பகுதியில் வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது, தங்களின் வீடுகளில் உள்ள பயனில்லா பொருட்கள், பாட்டில்கள், டயர்கள், ரப்பர் டியூப், பழைய துணிகள் போன்றவற்றை எரித்து மாசு படுத்த வேண்டாம் என்று தெரிவித்தனர். அதோடு, பயன்படாத 60 பழைய டயர்களையும் பொதுமக்களிடம் இருந்து நகராட்சி பணியாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

பரங்கிப்பேட்டை

இதேபோன்று பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா போகி பண்டிகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முகமதுயூனுஸ் முன்னிலை வகித்தார்.

புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு பணியாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு, விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். முடிவில் துப்புரவு ஆய்வாளர் ஜோதி நன்றி கூறினார்.


Next Story