உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்... டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து


உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்... டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து
x

மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

அதிகரிப்பு

தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர்களும், பொதுமக்களும் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

கடுமையான அபராதம்

பெரம்பூரைச் சேர்ந்த நர்சு காயத்ரி கூறும்போது, 'புகைபிடிப்பதால், அதை புகைப்பவர்கள் மட்டுமின்றி, அருகில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகிறோம். அதுவும் கர்ப்பிணி என்றால் அவருடைய வயிற்றில் உள்ள சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் புகைபழக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளியேற வேண்டும். சிறுவர்கள்கூட சிகரெட் வாங்கி புகைப்பதால், அவர்களது நலன் கருதி அதன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும். பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை கடுமையாக்குவதுடன், அபராத தொகையையும் அதிகரிக்க வேண்டும்' என்றார்.

மதிப்பு குறைகிறது

பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குணா கூறுகையில், 'புகைபிடிப்பதால் நமக்கு நாமே கெடுதலை தேடிக்கொள்கிறோம். அத்துடன் இந்த பழக்கத்தால், தொழில் விஷயமாக பெரிய நபர்களிடம் பேசும்போது நம்மீது அவர்களுக்கு தவறான எண்ணம்தான் தோன்றுகிறது. சமுதாயத்திலும் நல்ல மதிப்பு இல்லாமல் போகிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்து எடுத்துக்கூறினால் இன்றைய இளைய சமுதாயத்தினர் கேட்பதில்லை. பொது இடங்களில் புகைபிடிக்கும் பழக்கத்தை தடுப்பது காலத்தின் கட்டாயம்' என்றார்.

நாகரிகம் என்று நினைத்து...

ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் மீனாகுமாரி, 'நாகரிகம் என்று நினைத்தும், தங்களை ஹீரோவாக எண்ண வேண்டும் என்பதற்காகவும் புகைபிடிப்பவர்களால் அனைத்து தரப்பினருமே பாதிக்கப்படுகின்றனர். இப்படி இந்த பழக்கத்தால் ஒட்டுமொத்த சமுதாயமே பாழ்படுகிறது என்பதை புகைபிடிப்பவர்கள் உணர்ந்து அதை கைவிட வேண்டும். சிகரெட் விற்பனையை தடுக்க முடியாது. அவ்வாறு செய்தால் வேறு வழியில் வாங்கி பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே அனைவருடைய ஆரோக்கியம் கருதி, பொது இடங்களில் புகைபிடிப்பதை அப்பழக்கம் உள்ளவர்களே தவிர்க்கலாம்' என்றார்.

சொந்த காசில் சூனியம்

மயிலாப்பூரைச் சேர்ந்த சிவம்ஜோதி கூறும்போது, 'எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன், முறையாக தொழிலையும் கவனிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குடும்பத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டதால் இப்பழக்கத்தை கைவிட்டேன். 'சொந்த காசில் ஏன் சூனியம் வைக்க வேண்டும்?' என்று யோசித்து அதில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டேன். தொழிலையும் நன்றாக கவனித்து வருகிறேன். புகையிலையை பயன்படுத்துபவர்களால், அந்த பழக்கம் இல்லாதவர்களுக்கும் சுவாசப் பிரச்சினை, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து இதை தடுக்க வேண்டும்' என்றார்.

விழிப்புணர்வு வேண்டும்

சென்னையை சேர்ந்த இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயகுமார் கூறும்போது, 'இதயத்தில் ஏற்படும் பல நோய்களுக்கு புகைபிடிப்பது மிக முக்கிய காரணமாக அமைகிறது. இப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தநாளங்களில் கொழுப்பு அதிகம் படிகிறது. அதேபோல் புகைபிடிப்பவர்களுக்கு ரத்தக் கட்டிகள் உருவாகி இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தையும் தடுக்கிறது. சிகிச்சைக்கு வரும் இதய நோயாளிகளின் ரத்த நாளங்களில், புகைபிடிப்பதால் ஏற்படும் அடைப்பு காணப்படுகிறது. எனவே அதிகளவில் புகைபிடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்து பொதுமக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

அதிகரிப்பு

இல்லத்தரசி லட்சுமி கூறும்போது, 'தன்னையும் அழித்து பிறரையும் அழிப்பவர்கள்தான் புகைப்பிடிப்பவர்கள். கொஞ்சகாலமாக பொது இடங்களில் புகைபிடிப்பது குறைந்திருந்தது. ஏதோ காரணத்தால் தற்போது அது அதிகரித்துள்ளது. சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாக நினைக்கின்றனர். அதன் பாதிப்பு பின்னர்தான் தெரியும். இப்பழக்கத்தை ஒழிக்க அனைவரும் இணைந்து போராட வேண்டும்' என்றார்.

ஞாபகமறதி நோய் வரும்

அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம் கூறும்போது, 'இளைய சமுதாயத்தினர் இடையே புகைபிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவுவது கவலை அளிக்கிறது. நரம்பியல் ரீதியாக பார்த்தால், புகைபிடிப்பதால் வாதநோய் வர 4 சதவீத வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஞாபகமறதி உள்ளிட்ட நரம்பியல் நோய்களுக்கும் புகைபழக்கம் வித்திடுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களில் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, 'கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்' என்பதுதான். நெடுநாட்களாக பழகிப்போன புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட உறுதியான வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் இருந்தால் மட்டுமே, நம்மையும் மற்றவர்களையும் புகையிடம் இருந்து காப்பாற்ற முடியும்.


Next Story