இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x

இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மீனம்பாக்கம்,

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 7-ந் தேதி முதல் நடக்கும் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

கடந்த 2 நாட்களாக 49 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டனர். 12 பேர் அவர்களது சொந்த செலவில் நேரடியாக வந்துள்ளனர்.

அதன்தொடர்ச்சியாக நேற்றும் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் நாடு திரும்பினர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 49 பேர் வந்தனர். அவர்களில் 32 பேர் பல்வேறு விமானங்களில் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கும், 9 பேர் கோவை விமான நிலையத்துக்கும், 8 பேர் மதுரை விமான நிலையத்துக்கும் வந்தடைந்தனர்.

அமைச்சர் வரவேற்றார்

சென்னை விமான நிலையம் வந்தடைந்த 32 தமிழர்களையும் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடசென்னை தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி, அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகளும் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் இஸ்ரேலில் சிக்கி தவித்த 128 தமிழர்களின் விவரங்கள் கிடைத்தது. மத்திய அரசின் ஆபரேன் அஜய் திட்டம் மூலம் விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்டு வரும் பணி நடந்து வருகிறது.

தமிழ்நாடு அயலக தமிழர் நலத்துறை மூலம் தினமும் இஸ்ரேலில் உள்ளவர்களிடம் பேசப்பட்டு வருகிறது. டெல்லிக்கு அழைத்து வரப்படும் தமிழர்கள், அதிகாரிகள் உதவியுடன் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். அவர்கள் சென்னை, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

110 பேர் திரும்பினர்

தமிழகத்தைச் சேர்ந்த 128 பேரில் இதுவரை 110 பேர் தமிழகம் வந்து உள்ளனர். மீதி 18 பேர் தாயகம் வரவேண்டியது உள்ளது. மீட்கப்பட்டு வருபவர்கள், அவர்களது சொந்த ஊருக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மதுரை, கோவை வருபவர்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் வரவேற்று தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்தியர்களும், தமிழர்களும் யாரும் பாதிப்புக்குள்ளாக வில்லை.

95 சதவீதம் பேர் உயர் படிப்பிற்காக இஸ்ரேல் சென்று உள்ளனர். ஒரு சிலர் வேலை சம்பந்தமாகவும், படிக்கும் உறவினர்களை காணவும் சென்று உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தமிழர்கள் வேலை வாய்ப்புக்காகவும், படிப்பதற்காகவும் சென்று இருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் விவரங்களை சேமிக்க விரைவில் இணையதளம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனதளவில் பாதிப்பு

இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பி வந்த திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் கூறும்போது, "ஜெருசலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, மற்ற இடங்களில் தான் பிரச்சினை இருந்தது. எங்களைப் பற்றி பெற்றோர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். மத்திய அரசு திட்டத்தால் நாடு திரும்பியுள்ளோம்" என்றார்.

சேலத்தைச் சேர்ந்த கண்ணன் கூறும்போது, "இந்தியாவில் இருந்து சென்றவர்களில் நாடு திரும்ப விரும்பியவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று நம்புகிறோம். உடல் அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் மனதளவில் பாதிப்பில் இருந்தோம். இந்த போரால் குழந்தைகள் எல்லாம் ரொம்பவே பயந்து போனார்கள்" என்றார்.


Next Story