வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி சமூகத்தை வழிநடத்த வேண்டும்: மாணவர்களுக்கு, முதல்-அமைச்சர் அறிவுரை


வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி சமூகத்தை வழிநடத்த வேண்டும்: மாணவர்களுக்கு, முதல்-அமைச்சர் அறிவுரை
x

வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி சமூகத்தை வழிநடத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் 'தலை நிமிரும் தமிழகம்' என்ற தலைப்பில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

சுறுசுறுப்பு-ஊக்கம்

விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய, ஊக்கம் தரக்கூடிய வகையில் என்னை இயக்கிக் கொண்டிருக்கக்கூடியவர்கள் யார் என்று கேட்டால், மாணவர்களும், இளைஞர்களும்தான். திராவிட இயக்கம் என்பதே பேசிப்பேசி வளர்ந்த இயக்கம்; திராவிட இயக்கம் என்பதே எழுதி, எழுதி வளர்ந்திருக்கக்கூடிய இயக்கம். தி.மு.க.வின் கூட்டங்களை 'மாலை நேரக்கல்லூரிகள்' என்று அழைப்பதுண்டு. அந்தளவிற்கு அறிவாற்றல், சொல்லாற்றல் அதில் அடங்கியிருக்கும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரை வழிகாட்டிகளாக கொண்டு நம்முடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். தி.மு.க. அரசு எப்போது ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடக்கூடிய, வாதாடக்கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதெல்லாம் மிகப்பெரிய வரலாறு.

சிறப்பு உணவு

2007-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியது தி.மு.க. ஆட்சிதான். 2009-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இதுவரை 15 ஆயிரத்து 327 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் முதல்முறையாக தொடங்கப்பட்டது. இந்த வரலாற்றின் நீட்சியாக நாம் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, செய்து வரும் சில திட்டங்களை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிறுபான்மையினர் விடுதி மாணவ-மாணவிகளுக்கு, புத்த பூர்ணிமா, மகாவீரர் ஜெயந்தி, பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஆணையிட்டு உள்ளோம். 14 சிறுபான்மையினர் நலக்கல்லூரி விடுதிகளில், ரூ.14 லட்சத்தில் ''செம்மொழி நூலகங்கள்'' ஏற்படுத்தப்பட்டு உள்ளதோடு, ரூ.5 லட்சத்து 90 ஆயிரத்தில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மக்கள் மன்றத்தில்...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 2021-22-ம் ஆண்டு முதல் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2023-ம் ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 3 ஆயிரத்து 987 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டு உள்ளது. இப்படி, சிறுபான்மையினர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசின் மூலமாக தொடர்ந்து செய்து வருகிறோம்.

சிறுபான்மையினர் உரிமைகளை காக்க மக்கள் மன்றத்திலும் தி.மு.க. தொடர்ந்து செயலாற்றிடும் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம், நம்முடைய தமிழ்நாட்டுக்கு என்று தனி குணம் உண்டு. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என்று பண்பட்ட பண்பாட்டை கொண்ட நம் தமிழ் மண்ணின் உணர்வை நீங்கள் அனைவரும் பெற வேண்டும். ஒற்றுமையோடு வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி நமது சமூகத்தை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மனிதநேயத்தை போற்றுங்கள். உங்கள் எண்ணங்களை அழுக்காக்கும் கருத்தியல்களை புறந்தள்ளுங்கள். நல்லிணக்கத்தின் பண்பை மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து எடுத்துச்செல்லுங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கலந்துகொண்டோர்

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story