தென்பெண்ணை ஆற்றங்கரையில் மண் அரிப்பு


தென்பெண்ணை ஆற்றங்கரையில் மண் அரிப்பு
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர்,

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பியதை அடுத்து, உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதற்கிடையே திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் தடுப்பணையில் மதகுகள் ஏற்கனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் வலது கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கரை பலமிழந்து உடையும் அபாய நிலை உருவானது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மண் கொட்டி சரிசெய்யும் பணி நடைபெற்றது.

அமைச்சர் ஆய்வு

இதை, அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பாதிப்பு இல்லை

பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில், தற்போது, மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் போன்ற காரணத்தினால் தென்பெண்ணையாற்றில் அதிகப்படியான தண்ணீர் செல்கிறது.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, அதாவது 2 வாரங்களுக்கு முன்பு நானும், மாவட்ட கலெக்டரும் இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தோம். இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், தடுப்பணையிலிருந்தும் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டாலும் இப்பகுதியில் மழைநீரினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

கரைகள் பலப்படுத்தும் பணி

மேலும், அதிகப்படியான நீர் வரப்பெற்றாலும் அருகிலுள்ள தடுப்பணைக்கு சென்று செல்லுமாறு நீரின் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கப்படுவதோடு, நீரினால் கரைப்பகுதிகள் சேதமடையாத வண்ணம் கரைப்பகுதிகளை பாதுகாக்க கருங்கற்கனை கொண்டு கரைகளை பலப்படுத்திடும் பணி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலம் தொடங்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். தொடர்ந்து, முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட மாரங்கியூர்-ஏனாதிமங்கலம் தற்காலிக தரைப்பாலத்தை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், கோலியனூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகவேல், ஏரளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலபதி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story