ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர் சாவு


ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர் சாவு
x
தினத்தந்தி 2 July 2023 9:04 PM GMT (Updated: 3 July 2023 11:03 AM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே அண்ணன் மகன்களை காப்பாற்றி விட்டு ராணுவ வீரர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே அண்ணன் மகன்களை காப்பாற்றி விட்டு ராணுவ வீரர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

ராணுவ வீரர்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத்தெருவை சேர்ந்தவர் அடைக்கலசாமி.இவருடைய மகன் ஆரோன் இளையராஜா (வயது38). இவருடைய மனைவி சுகன்யா.

திருச்சியில் உள்ள ராணுவ பட்டாலியனில் ஹவில்தாராக வேலை பார்த்து வந்த ஆரோன் இளையராஜா 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

ஆற்றில் மூழ்கினார்

ஆரோன் இளையராஜா நேற்று மதியம் தனது அண்ணன் மகன்களான சூர்யா (18), ஹரீஷ் (12) மற்றும் மனைவி சுகன்யாவுடன் அந்த பகுதியில உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சூர்யாவும், ஹரீசும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதை பார்த்த ஆரோன் இளையராஜா, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அண்ணன் மகன்கள் 2 பேரையும் மீட்டார். பின்னர் அவர் கரைக்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

உடல் மீட்பு

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா உடலை மீட்டனர்.

தகவல் அறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோன் இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகன்களை காப்பாற்றி விட்டு ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story