மக்கள் நீதிமன்றத்தில் 1,876 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 1,876 வழக்குகளுக்கு தீர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,876 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நாமக்கல்

மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் முனுசாமி, ஜெயபிரகாஷ், சுந்தரையா, செல்வராஜ், கிருஷ்ணன், நந்தினி மற்றும் வட்ட அளவிலான சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. முதன்மை குற்றவியல் நீதிபதி வடிவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

இதில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.

1,876 வழக்குகளுக்கு தீர்வு

குறிப்பாக ராசிபுரம் கோனேரிப்பட்டியை சேர்ந்த கவிதா கடந்த 2018-ம் ஆண்டு சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரது சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வக்கீல் கணபதி வாதாடி வந்தார். இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டு, கவிதாவுக்கு இழப்பீடாக ரூ.17 லட்சத்து 66 ஆயிரம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் விபத்தில் காயம் அடைந்த தனியார் பஸ் மேலாளர் ஜெயக்குமார் என்பவருக்கு ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான ஆணையை மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார். மக்கள் நீதிமன்றத்தை பொறுத்த வரையில் வென்றவர், தோற்றவர் என வேறுபாடு கிடையாது எனவும், இங்கு வழங்கப்படும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 3,443 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,876 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.16 கோடியே 18 லட்சத்து 91 ஆயிரத்து 183 செலுத்தி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story