பாபநாசம் அணையில் இருந்து காரீப் பருவ சாகுபடிக்காக தண்ணீரை திறந்துவைத்தார் சபாநாயகர் அப்பாவு..!


பாபநாசம் அணையில் இருந்து காரீப் பருவ சாகுபடிக்காக தண்ணீரை திறந்துவைத்தார் சபாநாயகர் அப்பாவு..!
x
தினத்தந்தி 19 July 2023 10:10 AM GMT (Updated: 19 July 2023 10:49 AM GMT)

பாபநாசம் அணையில் இருந்து காரீப் பருவ சாகுபடிக்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்துவைத்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. இந்த அணை யில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது குறைந்தபட்சம் 60 அடி வரை அணையில் நீர்மட்டம் இருந்தால் பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவு பெய்யாவிட்டாலும், ஓரளவு பெய்த மழையின் காரணமாக இன்றைய நிலவரப்படி 70.90 அடியாக உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது வரை திறக்கப்படாததால் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை பாசனத்திற்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், கன்னடியன் மற்றும் நதியுண்ணி கால்வாய்களில் நீரானது இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நீரானது இன்று தொடங்கி வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை மொத்தம் 105 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. கார் சாகுபடி, குடிநீர் தேவைக்கென மொத்தம் 3015 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story