சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
x

சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நேற்று சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நடராஜ பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாதம் வரும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதேபோல் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

அதன்படி விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு நேற்று பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து திருமுறைகள், சிவபுராணம், நடராஜ பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கு நடராஜர் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதேபோல் உடையார்பாளையம் நறுமலர் பூங்குழல் நாயகி சமேத பயறனீஸ்வரர் கோவிலில் பல்வேறு வகையான பொருட்களை கொண்டு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story