தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு


தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு
x

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியான பயனாளிகள் தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியான பயனாளிகள் தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு அவசியம் தேவை. தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு தொடங்கும்போது சம்பந்தப்பட்டவரின் ஆதார் எண் என்.பி.சி.ஐ.யுடன் இணைக்கப்பட்டு விடும். ஆகையால் இந்த தொகை எந்தவிதமான தடையின்றி வழங்கப்பட்டு விடும்.

இதன்மூலம் அரசின் அனைத்து விதமான மானியங்களையும் இந்த வங்கி கணக்கிலேயே பெற்று கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்க அதிகப்படியாக ஒரு நிமிடம் தான் ஆகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் தொடங்கப்படும் அனைத்து கணக்குகளுக்கும் கியூஆர் கார்டு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண் கைரேகையை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். மேலும் கணக்கில் உள்ள செல்போன் எண் (ஓ.டி.பி) மூலம் கணக்கில் இருந்து எளிய முறையில் பணம் போடவும், எடுக்கவும் முடியும்.

சிறப்பு ஏற்பாடுகள்

இந்த வங்கி கணக்கு தொடங்கி கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியான பயனாளிகள் பயன்பெறலாம். இதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அருகில் உள்ள தபால்நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியரை அணுகி மாநிலஅரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9840122061 மற்றும் 8825888671 என்ற செல்போன் எண்களிலும், 8904893642 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story