வங்கி கணக்கு தொடங்க அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடு


வங்கி கணக்கு தொடங்க அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடு
x

மகளிர் உரிமைத் தொகைக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மகளிர் உரிமைத் தொகைக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.இது குறித்து மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப்இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதார் எண்

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரர் அல்லது கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

இருப்பு தொகை

இந்த கணக்கிற்கு இருப்பு தொகை கிடையாது. கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் மாதாந்திரஉரிமை தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், வீடுதேடி வங்கி சேவை என்ற சிறப்பு சேவை மூலம் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மட்டுமின்றி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், பி.எம். கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.

பயன்பெறலாம்

எனவே மயிலாடுதுறை மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story