45 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
![45 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் 45 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/01/1542155-mugam-.webp)
45 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
மழைக்காலத்தையொட்டி டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள் பரிசோதனை கருவிகள் உள்ளிட்டவை போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு நோயாளிகளுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க நேற்று ஒரேநாளில் 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. அதன்படி திருச்சியில் அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்கள், பள்ளிகள், பொது இடங்கள் என நகரில் 15 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 30 இடங்களிலும் என 45 இடங்களில் முகாம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். இதில் டெங்கு அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.