வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடக்கிறது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடக்கிறது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1,484 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் 2023 ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரினை சேர்க்க படிவம் 6, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள நபர்களில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயரினை நீக்கம் செய்ய படிவம் 7, பெயர், முகவரி மற்றும் புகைப்பட விபரங்களை திருத்தம் செய்ய மற்றும் அதே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம் 8 ஆகியவற்றை வழங்கி பொதுமக்கள் பயனடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in மூலமாகவும், Voter Helpline Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மாற்றி அமைப்பு

பாளையங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கீழ் காணும் வாக்குச்சாவடி மையங்களில் இன்று (சனிக்கிழமை) காவலர் எழுத்து தேர்வு தொடர்பான ஆயத்தபணி மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எழுத்து தேர்வு நடைபெறுகிறது. எனவே அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பதிலாக வேறு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்களை இந்த தேதிகளில் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மாற்றாக பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிக் பள்ளியிலும், சாராள் தக்கர் பள்ளி வாக்குசாவடிக்கு மாற்றாக சி.எஸ்.ஐ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் செயல்படும்.

தியாகராஜநகர் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் ஏற்கனவே உள்ள 5 வாக்குச்சாவடி மையங்கள், தியாகராஜநகரில் உள்ள ராம்நகர் ரோஸ்மேரி பள்ளியில் கூடுதல் வாக்குசாவடி மையமாக செயல்படும்.

மேலும் வி.எம்.சத்திரம் தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு மாற்றாக கே.டி.சி நகர் ஒயாசிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாக்குசாவடி மையமாக செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story