விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி பெற சிறப்பு முகாம்


ஆரணி தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி பெற சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனைத்து அரசு துறை அலுவலர்களும் அனுமதி வழங்குவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் ஆரணி தாலுகாவில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் நடத்தும் விழாக்களுக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமான வருகிற 17-ந் தேதி வரை ஆரணி தாலுகா அலுவலகத்திலேயே மின் துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் அனுமதியும், தீயணைப்புத்துறை, மின்வாரியத்துறை, பொதுப்பணித்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலை துறை அனுமதியும் ஒரே இடத்தில் பெற்று செல்ல சிறப்பு முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் இதன் அடிப்படையில் போலீசார் அனுமதி வழங்குவது சம்பந்தமாகவும் முடிவு செய்தனர்.

இதில் ஏற்கனவே விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட இடத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். புதிதாக விநாயகர் சிலை அமைத்து விழா நடத்த அனுமதி கிடையாது என போலீசாரும், அரசுத்துறை அதிகாரிகளும் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ராஜாங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் பிரமீளா, நித்யா, கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுப்பணித்துறை, மின்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து பிரதிநிதிகள், நெடுஞ்சாலை துறை, விழா குழுவினர், விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story