கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்களை பதிவு செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம்கள்


கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்களை பதிவு செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம்கள்
x

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்களை பதிவு செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கியது.

அரியலூர்

237 ரேஷன் கடைகளில்...

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனால் இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் தாலுகாவில் உள்ள 163 ரேஷன் கடைகள், செந்துறை தாலுகாவில் உள்ள 74 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவு செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம்கள் அந்தந்த ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளின் அருகே உள்ள பள்ளிகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்டவைகளில் நேற்று முதல் தொடங்கியது.

4-ந்தேதி வரை நடக்கிறது

குடும்ப தலைவிகள் முகாம் நடைபெறும் இடங்களுக்கு ஆர்வத்துடன் வந்து காத்திருந்து விண்ணப்பங்களை பதிவு செய்து விட்டு சென்றனர். வாலாஜாநகரம் ஊராட்சி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முதற்கட்ட சிறப்பு முகாம்கள் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் மீதமுள்ள பகுதிகளில் 2-ம் கட்டமாக சிறப்பு முகாம்கள் வருகிற 5-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்

இந்த முகாம் அரியலூர் தாலுகாவில், பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் (வடக்கு), வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரியநாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி, நாகமங்கலம், ரெட்டிப்பாளையம், புதுப்பாளையம், சிறுவளூர், கருப்பூர் சேனாபதி, இடையத்தாங்குடி, பெரியதிருக்கோணம், ஆலந்துறையார்கட்டளை, கருப்பிலாக்கட்டளை, அருங்கால், ஆண்டிப்பட்டாக்காடு, புங்கங்குழி, ஓரியூர், மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

மேலும் அரியலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேலப்பழூவூர், கீழையூர், கீழப்பழூவூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் (வடக்கு, தெற்கு), பளிங்காநத்தம், கரையவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி, வெற்றியூர், கோவில் எசனை (மேற்கு, கிழக்கு), எலந்தைக்கூடம், குலமாணிக்கம் (மேற்கு, கிழக்கு), கண்டிராதீர்த்தம், திருமழபாடி, அன்னிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம், விழுப்பனங்குறிச்சி, கீழக்கொளத்தூர், சின்னப்பட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகியமணவாளம், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர் ஆகிய கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

செந்துறை தாலுகாவில், ஆனந்தவாடி, உஞ்ஜினி, மருவத்தூர், பெரியாக்குறிச்சி, வஞ்சினபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை, சிறுகளத்தூர், பொன்பரப்பி, நாகல்குழி, பரணம், கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, கீழமாளிகை, பிலாக்குறிச்சி, சிறுகடம்பூர், சன்னாசிநல்லூர், தளவாய் (வடக்கு, தெற்கு), ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்தனூர், குழுமூர், மணப்பத்தூர், அசாவீரன்குடிக்காடு, துளார் ஆகிய கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. அரியலூர் நகராட்சி பகுதியில் அமுதம், அமராவதி-1, அமராவதி-2, அமராவதி-3, ஏ.சி.எம்.எஸ்-1, ஏ.சி.எம்.எஸ்.2, வி.எஸ்.பி-1, வி.எஸ்.பி-2 ஆகிய ரேஷன் கடைகளில் நடைபெற்று வருகிறது.


Next Story