கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்


கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

லட்சுமி அலங்காரம்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கோவிலில் 42-ம் ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் மதுரகாளியம்மன் ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நவராத்திரி 8-ம் நாள் விழாவான நேற்று உற்சவ அம்மன் லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். நவராத்திரி 9-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) ஆயுத பூஜையையொட்டி இரவு 7.30 மணியளவில் உற்சவ அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அம்பு போடுதல் நிகழ்ச்சி

நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நிறைவுபெறுகிறது.

இதேபோல் நேற்று பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உற்சவர் மரகதவல்லி தாயார் கஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story