உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடு: இன்று தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம்..!


உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடு: இன்று தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம்..!
x

தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) கிராம சபைக்கூட்டம் நடக்கிறது. முதன்முறையாக இந்த ஆண்டு முதல் நடக்கும் இந்தக்கூட்டத்தில் குடிநீர் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

சென்னை,

உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) கிராம சபைக்கூட்டம் நடக்கிறது. முதன்முறையாக இந்த ஆண்டு முதல் நடக்கும் இந்தக்கூட்டத்தில் குடிநீர் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 4-ல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக, மார்ச் 22 (இன்று) உலக தண்ணீர் தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கான இடம், நேரம் ஆகியவை கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கிராம சபைக்கூட்டத்தில் ஒவ்வொருவரும் நீரை பாதுகாத்தல், பயன்பாட்டினை குறைத்தல் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழை நீரை சேகரித்தல் என்கிற விழிப்புணர்வுடன் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும் புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர் நிலைகளை புனரமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கு ஏதுவாக அனைத்து நீர் நிலைகளையும் கணக்கெடுத்து அதற்கான திட்டங்களை தீட்டுதல், சமூக காடுகள் வளர்த்தல் மற்றும் பல்வேறு திட்டச்செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் கிராம சபையில் நடைபெறவேண்டும்.

ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், அதற்கான மக்கள் பங்கேற்புத்தொகை செலுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.

2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சிறுதானிய விவசாயம், குறைவான நீரில் அதிக விளைச்சல், சிறுதானியத்தை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

கிராம ஊராட்சியில் சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககப்பணிகள், கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக இணையதள வசதி மற்றும் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம் ஆகியன குறித்து கிராம சபைக்கு தெரிவித்தல் முக்கிய பொருட்களாக உள்ளன.

பிரதமரின் ஊரக குடியிருப்புத்திட்டம்- பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் தேர்வு, கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு முதலானவைகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை நடைபெறுவதை மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காணித்திட 'நம்ம கிராம சபை' எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராம சபையில் பங்குபெற்றோர் எண்ணிக்கை, ஒப்புதல் பெற்ற தீர்மானங்கள், கலந்துகொண்ட அலுவலர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் ஆகியன இந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எனவே, மார்ச் 22 (இன்று) நடைபெறும் கிராம சபைக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு விவாதத்தில் பங்குபெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Next Story