பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:47 PM GMT)

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

சிவகங்கை

புரட்டாசி மாத வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் வரும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக பக்தர்களால் கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைதோறும் பக்தர்கள் பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்தனர். நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் அடைக்கம்மை ஆச்சி மற்றும் கோவில் செயல் அலுவலர் விநாயகவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

திருக்கோஷ்டியூர்

தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமியநாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்தார். சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். திருப்பத்தூர் அருகே கொங்கரத்தி வண்புகழ் நாராயணபெருமாள் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் காட்சி அளித்தார். முன்னதாக காலை 9 மணி முதல் மதியம் 3மணி வரை யூனியன் துணைதலைவர் நாராயணன் தலைமையில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். காரைக்குடி அருகே உள்ள சிவஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story