புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி  பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழுப்புரம்


புரட்டாசி மாதத்தின் 3-ம் சனிக்கிழமையான நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்த வகையில் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள வரதராஜபெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு பாண்டுரங்கன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கோலியனூர் வரதராஜபெருமாள், அரசமங்கலம் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அக்ரஹாரத்தில் உள்ள அமிர்தவல்லி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு மூலவர், உற்சவ பெருமாளுக்கும், பின்னர் வெங்கடாஜலபதி பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு புஷ்ப துளசி அலங்காரம் செய்யப்பட்டும், ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ பெருமாளுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வெங்கடாஜலபதிக்கு புஷ்பாங்கி சேவை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story