பக்ரீத் பண்டிகையைெயாட்டிபள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையைெயாட்டிபள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 29 Jun 2023 7:30 PM GMT (Updated: 29 Jun 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

பக்ரீத் பண்டிகை

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த பண்டிகையை ஹச் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வீடுகளில் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதையொட்டி கிருஷ்ணகிரி ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதானம் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள மைதானத்தில், பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் நேற்று காலை 8.30 மணிக்கு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

குர்பானி

தொடர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி கொண்டனர். இதையடுத்து அசைவ உணவுகளை சமைத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து அளித்து, பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். மேலும் முஸ்லிம்கள் ஏழை மக்களுக்கு குர்பானி (ஆட்டு இறைச்சி) கொடுத்தனர். காவேரிப்பட்டணம் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி 7 பள்ளிவாசல்களை சேர்ந்த முஸ்லிம்கள் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் முன் திரண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதை தொடர்ந்து காவேரிப்பட்டணம் மிட்டஅள்ளி ஊராட்சியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். 1,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றுகூடி முக்கிய வீதி மற்றும் சாலை வழியாக நடந்து சென்று ஊத்தங்கரை வெளி விளையாட்டு மைதானத்திற்கு எதிரே உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். ஜமாத்தின் முத்தவல்லி சுன்னத் ஜமாத் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில் செயலாளர் சாகுல் ஹமீத், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, அசின் சில்க்ஸ் உரிமையாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ராயக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி, வேப்பனப்பள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள்பக்ரீத் பண்டிகையைகொண்டாடினர்.


Next Story