பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

நாமக்கல்

2-வது சனிக்கிழமை

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் பெறுவார்கள். அதன்படி இந்தாண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை கடந்த வாரம் கடைபிடிக்கப்பட்டது. 2-வது சனிக்கிழமையான நேற்று ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

சந்தனகாப்பு அலங்காரம்

இதேபோல் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு கோவிலில் உள்ள மூலவர் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், தாயாருக்கும் திருக்கோடி தீபம், கோவில் முன் உள்ளே கொடிக்கம்பத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. பெருமாள் கருட சேவையில் பக்தர்களுக்கு தங்க கவச அலங்காரத்தில் காட்சி தந்து கோவிலை சுற்றி வலம் வந்து மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் அதிகாலை முதல் பெருமாளை சாமிதரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள்

கந்தம்பாளையம் அருகே நல்லூரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு விசேஷ வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு வெள்ளி கவசம் அலங்கரிக்கப்பட்ட, ஆராதனை, அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story