கஞ்சா வியாபாரிகளை பிடிக்க 3 மாநிலங்களுக்கு தனிப்படை விரைவு

கஞ்சா வியாபாரிகளை பிடிக்க 3 மாநிலங்களுக்கு தனிப்படை விரைந்து உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கஞ்சா வியாபாரிகளை பிடிக்க 3 மாநிலங்களுக்கு தனிப்படை விரைந்து உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கஞ்சா பறிமுதல்
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகரில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் 60 கிலோ கஞ்சா, 45 கிலோ கஞ்சா சாக்லெட் மற்றும் ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
விசாரணையில் கஞ்சா சாக்லெட் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும், போதை மாத்திரைகள் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்தும் கோவைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
3 தனிப்படை
எனவே கஞ்சா வியாபாரிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று உள்ளனர்.
கஞ்சா விற்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஏற்கனவே கைதானவர்களிடம் இனி மேல் கஞ்சா விற்க மாட்டோம் என்று பிணைப்பத்திரம் வாங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து மாணவர் கள் இடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.
கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்து மீட்க கலெக்டரின் முயற்சியில் கோவை அரசு ஆஸ்பத் திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு போதைக்கு அடிமையானவர்களை மீட்க சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகள் காப்பகம் திறப்பு
இதையடுத்து கோவை பி.ஆர்.எஸ். போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கான மனமகிழ் மன்றம், குழந்தைகள் காப்பகம், நூலகம் ஆகியவற்றை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர், போலீசாரின் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கினார். அப்போது அவர், போலீசாருடன் சிறிது நேரம் கேரம் மற்றும் செஸ் விளையாடி மகிழ்ந்தார். அந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.






