அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு


அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு
x

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்துவதற்கான சிறப்பு பிரிவை கலெக்டர் முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்துவதற்கான சிறப்பு பிரிவை கலெக்டர் முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி அதிகாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சி 26-ந் தேதி நடக்கிறது. அன்று காலை பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கு 3 ஆயிரத்து 500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

நெய் காணிக்கை சிறப்பு பிரிவு

அதன் தொடர்ச்சியாக மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இதனை நேற்று கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து நெய் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு அதற்கான ரசீதினை வழங்கினார். இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர்.

பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம் என்று கோவில் அலுவலர்கள் தொிவித்தனர்.

சிறப்பு பிரிவு தொடக்க நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story