ஏனாத்தூர், இலுப்பப்பட்டு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்


ஏனாத்தூர், இலுப்பப்பட்டு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x

ஏனாத்தூர், இலுப்பப்பட்டு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்தூர், இலுப்பப்பட்டு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2020-21, 2021-22 -ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளுக்கான சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், வட்டார வள மேற்பார்வையாளர் நாகலட்சுமி சமூக தணிக்கை அதிகாரியாக கலந்து கொண்டு கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், பணிகளின் அளவு குறித்தும், அதிகப்படியாக பெற்றுள்ள சம்பளம் குறித்தும், கிராம மக்களிடம் எடுத்து கூறி சமூக தணிக்கை மேற்கொண்டார்.

மேலும் பணிக்கு வராமல் பதிவு செய்து சம்பளம் பெற்றுள்ள கிராம மக்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற்று சமூக தணிக்கை கணக்கில் வரவு வைக்க வேண்டுமென ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இதில் ஏனாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், ஒன்றிய பொறியாளர் மாரி செல்வம், ஊராட்சி செயலாளர் சூரி மற்றும் இலுப்பப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஊராட்சி செயலாளர் உமாபதி மற்றும் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் பாம்பு, தேள், உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகம் உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

பின்னர் பேசிய சமூக தணிக்கை அலுவலர், கிராம மக்களின் குறைகளை நீக்கும் வகையில் முதலுதவி பெட்டிகள் வைக்கப்படும். ஏதேனும் அசம்பாதம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சை பெற்றால் அதற்குண்டான நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என கிராம மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார். மேலும் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் அதற்கு உண்டான வகைகள் குறித்தும் கிராம மக்களுக்கு எடுத்துக் கூறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story