சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 27 Sep 2023 10:30 PM GMT (Updated: 27 Sep 2023 10:30 PM GMT)

பிரதோஷத்தையொட்டி, சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

சிறப்பு வழிபாடு

பிரதோஷ நாட்களில், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி காலையில் சுவாமி காளகத்தீஸ்வரர்-ஞானாம்பிகை, பத்மகிரீஸ் வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

அதன்பிறகு கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி 3 முறை வலம் வருதல் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

கோபால்பட்டி, நத்தம்

கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி கபாலீஸ்வரர் மற்றும் நந்திக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. இதில் கோபால்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, வில்வம், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தது.

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம்

பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி ஜோதிலிங்கேஸ்வரருக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரரும், நந்தியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் அய்யம்பாளையம் அருள்முருகன்கோவில், மலையடிவாரத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில், காந்திபுரம் சிவன்கோவில், சித்தரேவு திருச்சிற்றம்பல அருணாச்சலேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆதிசிவன் கோவில்

இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story