சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 12 Oct 2023 11:45 PM GMT (Updated: 12 Oct 2023 11:45 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் உள் பிரகாரத்தில் சாமி 3 முறை வலம் வருதல் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

இதேபோல் திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறுமலையில் உள்ள அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி-ரூபிணிக்கும், நந்திக்கும் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் நந்திக்கு 16 வகையான அபிஷேகமும், ரூபிணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சிறுமலை மற்றும் திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நத்தம் கோவில்பட்டி

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.

கோபால்பட்டியில் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கபாலீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. வேம்பார்பட்டி சிவன் கோவில், ஆவிளிபட்டி சிவன் கோவில், கணவாய்பட்டி ஆதிசிவன் சுந்தரலிங்கேஷ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story