கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்; 15, 19-ந் தேதிகளில் நடக்கிறது


கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்; 15, 19-ந் தேதிகளில் நடக்கிறது
x

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 15, 19-ந் தேதிகளில் நடக்கிறது.

அரியலூர்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு 15.9.2023 முதல் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளித்தேர்வு முடிந்தவுடன், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும். இதனால் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பேச்சுப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15-ந் தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 19-ந் தேதி அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் வருகிற 15 மற்றும் 19-ந் தேதிகளில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியானது காலை 9 மணிக்குத் தொடங்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குனர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடம், அனுமதி பெற்று இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story